Tamilnadu
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி 1500கி.மீ சைக்கிள் பிரசாரம்: அசத்தும் மாணவர் சங்கம்!
அரசு பள்ளிகளை பாதுகாக்க வழியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 1500கி.மீ சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்த பிரச்சாரம் மே 25 தொடங்கி மே 31 வரை தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரியிலிருந்து திருச்சி நோக்கி நடைபெறுகிறது.
இந்த பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கூறியதாவது, "பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் என பல தரப்பட்ட மாணவர்களின் கல்வியை இன்றும் அரசு பள்ளிகளே உறுதி செய்து வருகின்றன. மத்திய - மாநில அரசுகள் பொதுக்கல்வியை பாதுகாத்திட வேண்டும்.
கல்வியுரிமை சட்டம், சமச்சீர்கல்வி, நீதிமன்ற தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களில் சொல்லபட்ட அம்சங்கள் என அனைத்தையும் பரிசீலித்து அமல்படுத்த முன் வரவேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அதனையும் இணைத்து தற்பொழுது, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மாநில உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும். பாடத்திட்டதில் இந்துத்துவா கருத்தை புகுத்துவது, ஒற்றை கலாச்சாரம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, குலக்கல்வி, காவி-கார்பரேட் திட்டங்களை கொண்ட புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.
தமிழக அரசு ஏற்கனவே மூடப்போவதாக சொன்ன 3000 பள்ளிகளை மூடக் கூடாது. தற்போது 890 அரசு பள்ளிகளை மூட உத்தேசித்துள்ளதையும் கைவிட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ரூ.14 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகையை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் தற்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளிகளைவிட்டு அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளார்கள். காரணம் அங்குள்ள அரசாங்கம் பொதுமக்களோடு இணைந்து கல்வி திட்டத்தில் பல மாற்றம் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் தெருத்தெருவாக இறங்கி வீடுவீடாக பிரச்சாரம் செய்ததே காரணம். அதை ஏன் தமிழக அரசு செய்ய கூடாது?” என கேள்வியேழுப்பியுள்ளனர்.
”இந்தாண்டு கல்விக்காக கிட்டத்தட்ட ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லும் தமிழக அரசு, செலவுக் கணக்குகள் குறித்து முறையான புள்ளி விவரத்தை வெளியிட வேண்டும். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க அனுமதிக்கும் மிக மோசமான முடிவைதிரும்பப் பெற வேண்டும்.” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிகழ்வுகளை இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரும் சந்திரயான் விண்வெளித் திட்ட இயக்குனருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை கோவையில் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.
சென்னையில் நடைபெற்ற பிரச்சாரத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தொடங்கி வைத்தார், மேலும் இந்த பிரச்சாரத்திற்கு கல்வியாளர் வே.வசந்தி தேவி, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, பாலபிரஜாபதி அடிகளார், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!