Tamilnadu

வயல்களில் பொக்லைன் இயந்திரம்! ஹைட்ரோ கார்பன் எடுக்க பலி கொடுக்கப்படும் விவசாயிகள்

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 55 புதிய இடங்களுக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 3 இடங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று இடங்களில், நிலப்பரப்பு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும், கடற்பரப்பை வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்த மூர்க்கதனமாக முயற்சி செய்து வருகிறது அந்த நிறுவனம். அரசியல் கட்சிகள், விவசாயிகள், சேவை சங்கங்கள் அனைவரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் திட்டத்தை கைவிட மத்திய அரசு மறுக்கிறது.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. தற்பொழுது அந்த படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த முயற்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போராட்டக்குழு தெரிவிக்கையில் “ மத்திய, மாநில அரசுகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தைக் கையாண்டதைப் போல் திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் அப்படி செய்து விடலாம் என்று நினைக்கின்றன. அது ஒரு போதும் பலிக்காது, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனைத்து பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி தீவிரமான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்” என்கின்றனர்.