Tamilnadu

ஐவர் உயிரிழப்பு: சுகாதாரத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வசதியுடன் 15 படுக்கைகள் உள்ளன. மே 7ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

இதனால் நகர் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் மின்வெட்டு ஏற்படும்போது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால் சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மீனாக்குமாரி தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார்.

மேலும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நான்கு வாரங்களில் தமிழக சுகாதாரத் துறை செயலாளரும், மருத்துவ கல்வி இயக்குநரும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.