Chennai metro
Tamilnadu

மெட்ரோ சேவை பாதிப்பு - இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை!

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிகளுக்குப் புறம்பாக பணியாளர் சங்கம் தொடங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர் சங்கம் அமைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தியும், அதிகநேரம் பணிசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஊழியர்களின் குடும்பத்தினரும் மெட்ரோ நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Metro staffs protest

இதையடுத்து, மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டால் ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் இயங்காது. சென்னை செண்ட்ரல் - பரங்கிமலை வரை செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி டிஎம்எஸ் வழியாக வரும் ரயிலில் விமான நிலையத்திற்குப் பயணிக்கலாம்" என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.