Tamilnadu

வேட்பு மனுத்தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி !  

அரவக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்தநிலையில் இன்று காலை தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் மனு தாக்கல் செய்தார்.

அவருடன், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கே சி பழனிச்சாமி அரவக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சக்கரபாணி எம்எல்ஏ, காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி கூறியதாவது,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்க்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன்.தொகுதியில் வீடு இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு 25 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றுப் பகுதியில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து தரப்படும்.நான் ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது வடிவமைத்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.