pollachi jayaraman 
Tamilnadu

பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை: மகளிர் ஆணையம் விளக்கம் 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வீடியோ வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கிய நாதன், ‘நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்ததின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இந்த விவகாரத்தில் காவல் துறை முறையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்கள் குறைகளைச் சொன்னால், நடவடிக்கை எடுப்போம். பெண்ணின் பெயரை குறிப்பிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம். பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களை வெளிப்படுத்த கூடாது. ரகசியமாக விசாரணை நடத்துவோம். இந்த விவகாரம் தொடர்பாக 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்’ என்று தெரிவித்தார்.