Sports
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று (ஜன. 14) 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சியின்போதே கே.எல். ராகுலுக்கு பேக்கப் விக்கெட் கீப்பராக அணிக்குள் வந்த ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் தொடரை விட்டு விலகிய நிலையில், அவரது இடத்தில் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான துருவ் ஜுரேல் சேர்க்கப்பட்டார்.
இந்த சூழலில், முதல் போட்டியின்போது ஆல்-ரவுண்ட்ர் வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்தார். அவர் முதல் போட்டியின்போது 5 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில், பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் ஃபீல்டிங் செய்தார். இந்நிலையில் முதல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ள வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக, மாற்று வீரராக பேட்டிங் ஆல்ரவுண்டரும் பந்துவீச்சாளருமான ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முடிவினால் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூடுதல் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார். அக்சர் படேல், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருக்கையில், அனுபவம் இல்லாத ஆயூஷ் பதோனியை எடுத்தது ஏன்? என பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தத் தேர்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “இது முட்டாள்தனம்” என்று கொந்தளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஆயூஷ் பதோனியின் உள்ளூர் ஆட்டத்தை வைத்துக்கொண்டு இந்திய அணியில் இடமளிக்க வாய்ப்பில்லை. அவரது ரெக்கார்ட் என்ன?அவர் ஒன்றும் ஆட்டத்தின் போக்கை மாற்றி எதிரணியின் வெற்றியை பறிக்கக்கூடியவர் அல்ல.
அவரால் 6வது இடத்தில் இறங்கி சிக்சர் அடிக்க முடியுமா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அக்சர் படேல், பதோனி, நிதீஷ் ரெட்டி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் யார் உண்மையில் அணியில் இருக்க வேண்டும்? பதோனி LSG-யில் விளையாடினார், கம்பீர் அங்கு வழிகாட்டியாக இருந்தார். வேறு எந்தக் காரணத்தையும் நான் பார்க்கவில்லை. அவரை எப்படி பவுலிங் ஆல்-ரவுண்டர் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்" என காட்டமாக பேசியுள்ளார்.
ஐபிஎல் செயல்பாடுகள் ஒருநாள் போட்டித் தேர்வுக்கு அளவுகோலாகக் கூடாது என கூறிய அவர், ஐபிஎல் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இரண்டும் வேறுபட்டவை என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மேலும், பதோனியை பந்துவீச்சு ஆல்ரவுண்டராகக் கருதுவது குறித்து கேள்வி் எழுப்பியுள்ள ஸ்ரீகாந்த், “இவர் எப்படி பந்துவீச்சு ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறார்? ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால், ஏன் அக்சர் படேலைக் கொண்டுவரக்கூடாது? அவர் அனைத்து வடிவப் போட்டிகளிலும் ஒரு உண்மையான ஆல்ரவுண்டர்" என்றார்.
இப்படி இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், ஆயுஷ் பதோனியை ஏன் இந்திய அணியில் சேர்த்துள்ளோம் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கோடக் விளக்கமளித்துள்ளார். “ஆயுஷ் பதோனி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ரன் குவித்து, பந்து வீச்சிலும் கைகொடுத்து வருகிறார். நம்மால் ஒருநாள் போட்டிகளில் ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொண்டு விளையாட முடியாது.
பகுதிநேரமாக பந்துவீசும் வீரர்கள் தேவை. அவ்வப்போது 4-5 ஓவர்கள் வீசும் வீரர்கள் எப்போதுமே நமது அணிக்கு தேவை. அதன்படி தான் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனியை தேர்வு செய்தோம். அவரால் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பந்துவீச்சிலும் கை கொடுக்க முடியும் என்பதினாலே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளர்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!
-
“உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்!“ : பொங்கல் விழா கொண்டாட்டத்தில் முதல்வர் பேச்சு!