Sports

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.07.2025) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 இலட்சம் உதவித்தொகை காசோலைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உலகின் எப்பகுதியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கி கொள்ளவும், தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கான செலவு, தங்குமிடம், பயிற்சி பெறுதல், பயணத்திற்கான செலவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து நிதிஉதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ராணி மேரி கல்லூரி முதல்வர் முனைவர் B. உமாமகேஸ்வரி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 20.00 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி முதல்வர் முனைவர்
B. உமாமகேஸ்வரி அவர்களிடம் வழங்கினார்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற சைக்கிள் வீரர் பிரஜித்

தேசிய அளவில் பதக்கம் வென்ற சைக்கிள் வீரர் பிரஜித் அவர்களுக்கு 9,08,999 ரூபாய் மதிப்பீட்டிலான அதிநவீன  பந்தைய சைக்கிள் உபகரணத்தை வழங்கினார்.

தமிழ்நாடு சைக்கிளிங் வீரர் ஸ்ரீநாத் லஷ்மிகாந்த்

தொடர்ந்து, சமீபத்தில் கென்யாவில் நடைபெற்ற திறந்தவெளி கிராவல் வேர்ல்டு சீரீஸ் பந்தையத்தில் 6  வது இடம் பிடித்து  2025 அக்டோபர் 11-12 தேதிகளில்  நெதர்லாந்தில் நடைபெறவுள்ள UCI உலக கிராவல் சாம்பியன்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்ற தமிழ்நாடு சைக்கிளிங் வீரர் ஸ்ரீநாத் லஷ்மிகாந்த்க்கு 2.00 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மேலும், ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் கார்த்திகா மற்றும் பிரியதர்ஷிணி ஆகியோருக்கு தலா 1.50 இலட்சம் ரூபாய்க்கான  காசோலைகளை வழங்கினார்.

52வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் – 2025 போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை வாழ்த்தி, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 2.00 இலட்சம் ரூபாய்க்கான காசோலை உட்பட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 36.08 இலட்சம்  உதவித்தொகை காசோலைகள்  மற்றும் விளையாட்டு உபகரணங்களை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

Also Read: “அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!