Sports

பிரேசில் லெஜண்ட்ஸ் vs இந்தியன் லெஜண்ட்ஸ் போட்டி: ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமான பயணம் செய்யலாம்!

பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையிலான கால்பந்து போட்டி நாளை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் வைத்துள்ளவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு அறிக்கையில், "சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை 30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) பிரேசில் லெஜண்ட்ஸ் அணிக்கும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிக்கும் இடையில் கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் Football Plus Professional Soccer Academy நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும். இதை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கும் சென்று திரும்ப முடியும்.

கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி நாளை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்"என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: “சமத்துவம் காண்போம், மனிதத்தை போற்றும் நற்றமிழ்ச் சமூகமாக நடைபோடுவோம்!” : முதலமைச்சர் பேருரை!