Sports

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா : அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்த அஸ்வின்!

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை விளையாடுவதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

பின்னர் இரண்டாவது போட்டியில் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், துருவ் ஜூரேலி ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை ருசித்தது.

இதையடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பிறகு விளையாடிய இந்திய அணி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேலி ஆகியோரின் நிதான ஆட்டத்தால் 307 ரன்களை எட்டி ஆல் அவுட்டானது.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேபோல் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் 35 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி 40 ரன்கள் எடுத்த நிலையில் இன்றை ஆட்டம் முடிந்தது. நாளை 152 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது.

Also Read: "மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும்" - முன்னாள் இந்திய வீரர் கருத்து !