Sports

"தோனி இன்னும் 3 ஆண்டுகளுக்கு IPL தொடரில் ஆடவேண்டும்" - இளம்வீரர் விருப்பம் !

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப் பண்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தோனிக்கு தற்போது 42 வயதாகிய நிலையில், இந்த தொடர்தான் அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்றும், இந்த ஆண்டுக்கு பின்னர் தோனி ஓய்வு பெறுவார் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தோனி இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் ஆடவேண்டும் என சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "என்னை பொறுத்தவரை அடுத்த 2 அல்லது 3 சீசன்களுக்கு தோனி விளையாட வேண்டும். தோனி மிகவும் எளிமையான பழக்க வழக்கம் உடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக்கூடியவர். இதனால் அவரிடம் நேரம் செலவிடுவது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று, இதன் காரணமாக இந்திய வீரர்கள் தாண்டி வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் தோனியுடன் பேச, நேரம் செலவிட விரும்புவார்கள்.

தோனியை என்னுடைய மூத்த அண்ணனாக பார்க்கிறேன். அவர் மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் இருக்கிறது.எங்களுக்கு வேடிக்கையான தருணங்கள் நிறைய இருக்கிறது. அதனை களத்திலும் பார்க்கலாம். கொரோனா நேரத்தில் நாங்கள் களத்திற்கு வெளியே நிறைய நேரம் செலவு செய்திருக்கிறோம். எனக்கு இந்திய அணியில் விளையாட அவரால் தான் வாய்ப்பே கிடைத்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செயலில் ஈடுபட்டு வென்ற பாஜக : வெளியான சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி !