Sports

முச்சதம் விளாசிய தமிழக வீரர் : இமாலய ரன் குவிப்பில் தமிழ்நாடு அணி... ரஞ்சி கோப்பையில் அபாரம் !

உள்நாட்டில் நடக்கும் புகழ்பெற்ற ரஞ்சி தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி ரஞ்சி தொடரில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே தந்து வருகிறது.

இந்த நிலையில், ரஞ்சி தொடரில் தமிழக அணி சண்டிகர் அணியை சந்தித்தது. இதில் முதலில் ஆடிய சண்டிகர் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. இதனால் அந்த அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் ஆடிய தமிழ்நாடு அணியில் சச்சின் 16 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் நாராயண் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரதோஷ் ரஞ்சன் பால் 105 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த இந்திரஜித்தும் சதம் விளாசினார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய நாராயண் ஜெகதீசன் முச்சதம் விளாசினார். 321 ரன்கள் விளாசி ஆட்டமிழந்த அவரின் அதிரடி காரணமாக, தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இந்த போட்டியில் இன்னும் 2 நாள் மிச்சம் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அணி இந்த போட்டியில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

நாராயணன் ஜெகதீசன் கடந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதே போல அந்த தொடரின் ஒரு போட்டியில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: INDvsENG : கபில்தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின் - இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் காட்டிய இங்கிலாந்து !