Sports

"இந்திய மைதானங்களில் bazball அதிரடி எல்லாம் வேலைக்கு ஆகாது"- ஹர்பஜன் சிங் கருத்து !

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் பலரும் இந்த bazball முறைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலையில் இருந்தபோது, bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது.

இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், "இங்கிலாந்து அணியின் bazball அதிரடி இத்தொடரில் வேலை செய்யாது. ஏனெனில் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்தியாவில் முதல் பந்திலிருந்தே பந்து சுழல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.அதை 2 அணியை சேர்ந்த ஸ்பின்னர்களும் நன்றாக பயன்படுத்துவார்கள்.

இது போன்ற மைதானங்களில் அதிரடியாக ஆட முடியாது. இதனால் bazball அதிரடியை இங்கு பயன்படுத்த முடியாது. இந்த தொடரில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக அமையாமல் போனால் மட்டுமே இங்கிலாந்து தாங்கள் நினைக்கும் அளவுக்கு அடித்து நொறுக்கி வெற்றி காண முடியும். இந்திய மைதானங்களில் டாஸ் என்பது வெற்றியில் முக்கிய பங்காற்ற கூடியதாக இருக்கும்"என்று கூறியுள்ளார்.

Also Read: பும்ரா என்னிடம் தொடர்ந்து கூறும் அறிவுரை இதுதான்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் கூறியது என்ன?