Sports

இந்திய அணிக்கு 10% அபராதம் : புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு சரிந்த இந்தியா.. முழு விவரம் என்ன ?

உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

இந்த நிலையில், இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக இந்திய அணி பந்துவீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி 2.22 விதிமுறையின் படி குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசாத அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் குறைவாக இந்தியா பந்து வீசியதாக போட்டி நடுவர் கிறிஸ் ப்ராட் ஐசிசி அமைப்பிடம் புகார் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து போட்டி சம்பளத்தில் ஓவருக்கு 5% வீதம் மொத்தம் 10% இந்திய அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

அதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வி மற்றும் புள்ளிகள் குறைப்பு காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 6வது இடத்துக்கு சரிந்துள்ளது.

Also Read: "தற்காலிக மல்யுத்த கூட்டமைப்பு குழுவை ஏற்க முடியாது": பிரிஜ் பூஷன் உதவியாளர் அறிவிப்பு- முழு விவரம் என்ன?