Sports

இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர் : கிரிக்கெட்டிலும் எதிரொலித்த சர்வதேச அரசியல் : ஆஸ். கேப்டன் ஆதரவு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது காலணிகளில் பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், Freedom is human rights, all lives are equal என்ற வாசகங்கள் எழுதியிருந்தார்.

ஆனால், விளையாட்டில் அரசியலை கொண்டுவரக்கூடாது என அவரின் செயலுக்கு ஐசிசி அமைப்பு கண்டனம் தெரிவித்தது. பின்னர் அமைதி புறா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பேட்டையும், ஷூவையும் பயன்படுத்த அவர் ஐசிசி-யிடம் அனுமதி கோரினார். ஆனால், அதற்கும் ஐசிசி அமைப்பு அனுமதி மறுத்தது. அதனைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக உஸ்மான் கவாஜா கூறியிருந்தார். இதனியையே உஸ்மான் கவாஜாவின் செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Also Read: "எங்கள் தோல்வியால் ஒட்டுமொத்த தேசமும் ஏமாற்றமடைந்தது" - உலகக்கோப்பை குறித்து முஹம்மது ஷமி விரக்தி !