Sports

"கனவில் கூட நினைக்காதது நடக்கிறது" - CSK அணியில் இணைந்தது குறித்து இளம்வீரர்கள் நெகிழ்ச்சி !

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. மற்றொரு நியூஸிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், இந்திய வீரர் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி.

அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சமீர் ரிஸ்வி என்ற 20 வயது வீரரை வாங்க ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியும், சென்னை அணியும் போட்டியிட்டன. ஒரு கட்டத்தில் குஜராத் அணி பின்வாங்க டெல்லி அணி களத்தில் குதித்தது. ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத சென்னை அணி ரூ.8.40 கோடிக்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்தது. அதே போல அரவல்லி அவனேஸ் என்ற இளம்வீரரையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து ரச்சின் ரவீந்திரா, சமீர் ரிஸ்வி ஆகியோர் பதிவிட்டுள்ளனர். ரச்சின் ரவீந்திராவின் பதிவில், " சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள். மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து எல்லாம் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள்.

முதல் முறையாக ஐபிஎல் விளையாடப் போகிறேன். சிறந்த வீரர்களான மகேந்திர சிங் தோனி, ஜடேஜா ஆகியோர் உள்ள அணியில் இணையவுள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்னை ரசிகர்களை நான் நிச்சயம் மகிழ்விப்பேன் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

அதே போல இளம்வீரர் சமீர் ரிஸ்வி தோனியின் கேப்டன்சிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவு. அவருக்கு கீழ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விடவும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க போகிறது. நான் கனவில் கூட நினைக்காததெல்லாம் இப்போது நடக்கிறது. தோனியால் நல்ல வீரர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும். அதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சாம்பியன் அணி. அதிக கோப்பைகளை வென்ற அணியாக உள்ளது. தற்போது அங்கு நானும் இணைந்து நல்ல வீரராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதராகவும் இருப்பேன். இவ்வளவு அதிகமான பணத்தை வைத்து என்ன செய்வதென தெரியவில்லை. எனது பெற்றோரிடம் பணத்தை கொடுத்துவிடுவேன். அதன்பின் அதனை வைத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தடை : அரசுக்கு எதிராக செயல்பட்ட புகாரில் நீதிமன்றம் அதிரடி !