Sports

"முதல்முறைதான் மோசமாக உணர்ந்தேன், இப்போது பழகி விட்டது" -அணியில் இடம்பெறாதது குறித்து சாஹல் கருத்து !

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில், ந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம்வழங்கப்படவில்லை. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

எனினும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலுக்கு வாய்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியிலும் சாஹல் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் காயம் காரணமாக விலகிய நிலையில், சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினுக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. தொடர்ந்து உலகக்கோப்பை தொடரிலும் அஸ்வின் இடம்பிடித்தார். அஸ்வின் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததை பலரும் பாராட்டிய நிலையில், சாஹல் இல்லாததையும் பலர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து முதல் முறையாக சாஹல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "உலகக்கோப்பை அணியில் 15 பேர் மட்டுமே இடம்பெறமுடியும்.முதலில் அணியில் இடம் கிடைக்காததை எண்ணி கொஞ்சம் மோசமாக உணர்ந்தேன்.

ஆனால் மூன்று உலகக்கோப்பை தொடர்களில் இப்படி ஆகிவிட்டதால் எல்லாம் பழகி விட்டது. நான் அணியில் இருக்கிறேனோ இல்லையோ அணியில் இருப்பவர்கள் என் சகோதரர்கள் போன்றவர்கள் . இந்தியா உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது தான் முக்கிய குறிக்கோள்" என்று கூறியுள்ளார்.

Also Read: "இது நடக்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை," - உலகக்கோப்பை தொடரோடு ஓய்வை அறிவிக்கிறாரா அஸ்வின் ?