Sports

பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த கோலி.. அதிரடி கம்பேக் கொடுத்த KL ராகுல்.. இமாலய இலக்கை எட்டிய இந்தியா !

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் கில், மற்றும் ரோஹித் சர்மாசிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.

துவக்க ஜோடியாக 100 ரன்களை கடந்த இந்த ஜோடி, 121 ரன்கள் குவித்திருந்தபோது பிரிந்தது. ரோஹித் சர்மா 56 ரன்களுக்கும், கில் 58 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 24.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்திருந்தபோது மழை பெய்தது.

இதனால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் மழை விடாத காரணத்தால் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் மழை பெய்த காரணத்தால் போட்டி தாமதமாக தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று விட்ட இடத்தில் இருந்து இன்று ஆட்டத்தை தொடங்கிய கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் அரைசதம் கடந்த பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஓய்வுக்கு பின்னர் சுமார் 3 மாதத்துக்கு பிறகு களத்துக்கு திரும்பிய கே.ராகுல் இந்த போட்டியில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே கோலியும் ஒருநாள் போட்டியில் தனது 47-வது சதத்தை கடந்தார்.

இவர்களின் இந்த அதிரடி காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் குவித்தனர்.

இந்த போட்டியில் அபாரமான ஆடிய கோலி ஆடியதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் 267 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்து 321 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது.

Also Read: இந்தியா-பாகிஸ்தான் மோதல் : ரசிகர்கள் வராததற்கு இதுதான் காரணம் ! - முரளிதரன் கூறியது என்ன ?