Sports

ஒரு போட்டிக்கு ரூ.67.76 கோடி.. மொத்தம் ரூ.3,101 கோடி.. BCCI-ன் ஒளிபரப்பு உரிமையை வென்ற வயாகாம் 18 !

ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.

இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.

ஸ்பான்சர் உரிமம், ஒளிபரப்பு உரிமம் என இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை கட்டுப்படுத்தும் பிசிசிஐ கோடியில் வருமானம் ஈட்டத் தொடங்கியது. அதிலும் ஐபிஎல் தொடர் வந்தபின்னர் பிசிசிஐ-யின் வருமானம் அதன் அடுத்த உச்சத்தை தொட்டு ஐசிசி-யையே கட்டுப்படுத்தும் அளவு சென்றது.

இந்த நிலையில், 2023-28-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் மற்றும் தொலைக்காட்சி உரிமத்துக்காக பிசிசிஐ இணையவழியில் ஏலம் நடத்தியது. இதில் வயாகாம் 18 நிறுவனம் ரூ.5,963 கோடிக்கு இந்த உரிமையை வென்றுள்ளது. ஏலத்தில் கலந்துகொண்ட ஸ்டாா் இந்தியா, சோனி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இந்த உரிமையை வயாகாம் 18 நிறுவனம் வென்றுள்ளது.

இதில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.3,101 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமத்தை ரூ.2,862 கோடிக்கும் வயாகாம் 18 நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடரில் இருந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான போட்டிகளை வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்பும். இந்த காலகட்டத்தில் இந்திய அணி, 25 டெஸ்ட், 27 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 36 டி 20 ஆட்டங்களில் ஆடவுள்ளது. இதன் மூலம் ஒரு போட்டிக்கு சராசரியாக வயாகாம் 18 நிறுவனம் ரூ.67.76 கோடியை பிசிசிஐ-க்கு வழங்கும்.

Also Read: கால்பந்தில் கோடிகளை இறைக்கும் சவுதி அரேபியா.. ஐரோப்பாவுக்கு போட்டியாக உருவெடுக்குமா சவுதி ப்ரோ லீக் ?