Sports

”உலகளவில் நான் எதிர்கொள்ள பயந்த ஒரே பந்துவீச்சாளர் இவர்தான்” -தமிழரை பாராட்டிய வீரேந்திர சேவாக் !

நவீன இந்திய அணியை கட்டமைத்தவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியை குறிப்பிடுவார்கள். அவர் கண்டெடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்திய சேவாக், யுவராஜ், தோனி,ஹர்பஜன் போன்ற வீரர்கள்தான் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல வைத்தனர்.

அதிலும் கங்குலியால் கண்டெடுக்கப்பட்ட முத்து என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை சொல்லலாம். விவியன் ரிச்சர்ட் போல ஒரு ஆட்டக்காரர் நமக்கு கிடக்கமாட்டாரா என ஏங்கிக்கொண்டிருந்தபோது வந்தவர்தான் சேவாக். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போல விறுவிறுப்பாகிய பெருமை சேவாக்குக்கு மட்டுமே உண்டு.

சச்சினுக்கே எட்டாக்கனியாக இருந்த டெஸ்ட் முச்சதத்தை இருமுறை எட்டி முச்சதம் அடித்த முதல் இந்தியவர் என்ற சாதனையை படைத்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு பின்னர் இரட்டை சதத்தை அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின்-சேவாக் இணையை கண்டு உலகமே பயந்து நடுங்கிய காலம் ஒன்றும் இருந்தது.

இந்நிலையில் உலகளவில் தான் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்ள மட்டுமே திணறியதாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "ஷேன் வார்னே, ஷோயப் அக்தர், பிரட் லீ மெக்ராத் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு நான் பயந்தேன் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக, நான் பயப்படவில்லை.மெக்ராத் பந்துவீச்சில் என் உடம்பிலோ ஹெல்மெட்டிலோ அடிபட்டு விடுமோ என்று தான் பயந்தேன்.

ஆனால், முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை எதிர்கொள்ள நான் பயந்தேன். நான் அவருடைய பந்துகளை அடிக்க முயற்சிக்கும் போதெல்லாம் துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டமிழந்தேன். ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்னை கட்டுப்படுத்துவது என் ஈகோவை கிளறியது. அவரை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொள்ள எனக்கு நிறைய வருடங்கள் தேவைப்பட்டது" என்று கூறியுள்ளார்.

Also Read: "தோனி இப்படி ஒரு வீரராக விளையாடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்" -பிராவோவின் கருத்தை மறுத்த சேவாக் !