Sports

"பதக்கத்தை விட இங்கே நீதியை வெல்வதே மிகப்பெரிது"- பாஜக விமர்சனத்துக்கு ஒலிம்பிக் நாயகன் காட்டமான பதிலடி !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பாஜக சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார்.இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடர்பாக பேசிய பஜ்ரங் புனியா " இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அனைவரும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் எங்களை சிறப்பாக நடத்தும் வரை தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்" என்று அறிவித்தார். பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த போராட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மல்யுத்த வீராங்கனைகள் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும், பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவவருமான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க ஒன்றிய விளையாட்டு துறை சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் இந்த வன்கொடுமைக்கு காரணமாக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி தற்போது மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கள் மீது பாஜகவினர் கூறும் புகார்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒலிம்பிக் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காட்டமாக பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நாங்களும் எங்கள் இயல்புக்கு திரும்ப வருகிறோம். எங்களுக்கு விளையாடுவதும், அது சார்ந்து பயிற்சி எடுப்பதும் மிகவும் அவசியம். அதை நாங்கள் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் எங்களுக்கு நீதி கிடைத்தால் அது ஆசிய விளையாட்டில் வெல்லும் பதக்கத்தை விடவும் பெரிது” என அவர் கூறியுள்ளார்.

Also Read: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் மீண்டும் அம்பலமான பா.ஜ.க.வின் உண்மை முகம் -முரசொலி விமர்சனம் !