Sports

மீண்டும் மீண்டும் காயம்.. IPL தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. ரசிகர்கள் அதிருப்தி !

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 19-வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்றுவந்த அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை நிரூபித்து வந்துள்ளார்.

அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூரோடு இணைந்து இக்கட்டான தருணத்தில் அவர் அடித்த அரைசதம் அந்த தொடரையே இந்திய அணியின் பக்கமாக திரும்பியது. அதன் பின்னர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவர் அடித்த 85 ரன்களும் தொடர்ந்து அகமதாபாத்தில் அவர் அடித்த 96 ரன்களும் அவரை அணியில் அசைக்க முடியாத வீரராக மாற்றியது.

ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. அணியில் அவர் இடம்பெறுவதும் பின்னர் காயம் காரணமாக வெளியேறுவதுமாகவே அவரின் கடந்த 2 ஆண்டு கிரிக்கெட் பயணம் இருந்து வந்தது.

அதன் பின்னர் இந்திய அணியில் அவர் இடம்பிடித்தாலும் முன்பு போல அவரின் ஆட்டம் சீரானதாக இல்லாமல் இருந்தது. இதனால் பல போட்டிகளில் அணியில் இடம்பிடித்து இருந்தாலும் ஆடும் வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறாமல் இருந்தார்.

தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில்,அவர் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் இந்த தொடரில் சுமாராக ஆட்டத்தையே காட்டிய அவர் டெல்லி அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், தற்போது வாஷிங்டன் சுந்தர் மீண்டும் காயமடைந்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து அவர் முழுவதுமாக விலகுவதாக அவர் இடம்பெற்றுள்ள ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து காயத்தால் வாஷிங்டன் சுந்தர் பாதிக்கப்பட்டு வருவது அணியில் அவரின் இடைத்தையே காலிசெய்து விடும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: "இந்த அணி நிச்சயம் IPL இறுதிப்போட்டிக்கு முன்னேறும்" -முன்னாள் வீரர் குறிப்பிட்டுள்ள அணி எது தெரியுமா ?