Sports

'இந்த தகவல் கொடுத்தால் நிறைய பணம் கிடைக்கும்' : சூதாட்ட நபர் குறித்து BCCIல் புகார் கொடுத்த இந்திய வீரர்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் முகமது சிராஜ். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் வந்தபோது, கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் தன்னை சந்தித்து அணியின் விபரங்களைக் கேட்டதாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் தகவல்களுக்குப் பணம் தருவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில், முகமது சிராஜை தொடர்பு கொண்ட நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்று தெரியவந்தது. அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த நபர் இந்தியா விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பணத்தைக் கட்டி வந்துள்ளார். இதில் கையிலிருந்த அனைத்து பணத்தையும் இழந்த பிறகு முகமது சிராஜை அணுகியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா, சிஎஸ்கே அணி தலைவர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர்தான் பிசிசிஐ தனது ஊழல் தடுப்பு பிரிவைப் பலப்படுத்தியது. தற்போது ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் போட்டி நடக்கும் போது வீரர்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதுதான் இவர்களது வேலை.

மேலும் வீரர்களை யாரவது அணுகினால் உடனே இது குறித்து புகார்களைக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் புகார் கொடுக்காத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அப்படிதான் 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஷாகிப் அல் ஹசன் தன்னை தொடர்பு கொண்ட நபர் குறித்து விவரத்தைத் தெரிவிக்காமல் இருந்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாற்றுத்திறனாளிகள் Cricket அணி கேப்டனை மிரட்டிய நடத்துநர்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த போக்குவரத்துத்துறை!