Sports

ரிஷப் பண்ட்-க்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்.. பாராட்டும் இணையவாசிகள் !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கியுள்ள நிலையில், காயத்தால் விளையாடாத டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட்க்கு பதில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டை நினைவு கூறும் வகையில் அவரின் பெயர் எழுதிய அவரது ஜெர்சியை அணி வீரர்கள் அமரும் பெவிலியனில் தொங்க விட்டிருந்தது பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. டெல்லி அணி நிர்வாகத்தினர் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: பாகிஸ்தானில் மோசமான நிலைக்கு சென்ற உணவு பஞ்சம்.. இலவச உணவை வாங்க சென்ற 12 பேர் நெரிசலில் சிக்கி பலி !