Sports

ஆஸ்திரேலியாவுடன் தோல்வி எதிரொலி.. தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிர்ச்சி !

நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல்- ஜடேஜா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டணத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) , ஹர்திக் பாண்டியா(1 ) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி, ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுக்க இந்திய அணி ஒருவழியாக 100 ரன்களை கடந்து 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால் வெறும் 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்த அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.

அதன்பின்னர் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 49 வர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா, குல்தீப் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஆனால் 185 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தபோது அடுத்தடுத்த பந்தில் கோலி, சூரியகுமார் ஆட்டமிழக்க ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இறுதியில் இந்திய அணி 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்த ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் தலா 113 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும், தசம புள்ளி வித்தியாசத்தில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது.

Also Read: "மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் விளையாடியது மோசமான அனுபவம்" -கடந்த காலம் குறித்து மனம் திறந்த ரொனால்டோ !