Sports

"இந்திய அணி வீரர்கள் அடிக்கடி காயமடைய விராட் கோலிதான் காரணம்" -அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் விமர்சனம் !

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்துவரும் நிலையில், ஐசிசி கோப்பை தொடரில் மட்டும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது.

இந்த தொடரில் ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாததே தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஜடேஜா, பும்ரா தவிர இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்குமார் உள்ளிட்ட வீரர்களும் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுவாக பந்துவீச்சாளர்களே காயம் அடையும் நிலையில், இந்திய அணியில் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களுக்கு இணையாக காயமடைந்து முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள். இந்திய அணியின் இந்த நிலையை பல முன்னணி வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணி வீரர்கள் காயமடைய முன்னாள் கேப்டன் விராட் கோலிதான் காரணம் என கூறியுள்ளார். இதுத் தொடர்பாக பேசிய அவர், " இந்திய அணி வீரர்கள் பளு தூக்கும் புகைப்படத்தை பதிவிடுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் எதற்கு பளு தூக்க வேண்டும் ? அதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்தால் இன்னும் விளையாட்டில் சிறப்பாக விளையாடலாமே ?

பளு தூக்குதல் நிச்சியமாக உடலுக்கு வலுவை கொடுக்கும். ஆனால் நான், ஆகாஷ் சோப்ரா, தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், கங்குலி போன்ற வீரர்கள் விளையாடி கொண்டு இருந்த போது யாருமே ஒரு முறை கூட முதுகுவலி, தொடை தசை பிரச்சனைகள் நடந்ததே கிடையாது.

விராட்கோலி கேப்டனான பிறகுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நாங்கள் விளையாடும் போது எந்த விதமான பளு தூக்குதல் போன்ற பயிற்சி செய்தது இல்லை, அப்படி இருந்தும் நாங்கள் காயமடையாமல் விளையாடினோம். எல்லாரும் விராட்கோலி ஆக முடியாது. அவரவர் உடல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து தான் பயிற்சிகளை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: " IPL-ஐ விட BBL தொடர்தான் சிறந்தது.. அதற்கு காரணம் இதுதான்" - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கருத்து !