Sports

DRS விதிமுறையை புதிய மாற்றம்.. மகளிர் IPL தொடரில் வரவேற்பை பெற்ற BCCI ஐடியா.. அடுத்து ஆண்கள் IPL-தானா?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

அதைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடரை நடத்தவும் பிசிசிஐ அமைப்பு திட்டமிட்டு இந்தாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கியுள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கி விளையாடி வருகின்றன.

இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதி ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக டி.ஆர்.எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையை எல்.பி.டபில்யூ, கேட்ச் போன்றவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும், ஆனால், தற்போது மகளிர் ஐபிஎல் தொடரில் நோ-பால், வைட் போன்றவற்றிலும் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்த முடியும் என விதியில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விதியை இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் வீராங்கனைகள் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இது அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், வரும் ஆண்கள் ஐபிஎல் தொடரிலும் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

Also Read: PSG கிளப் அணியில் இருந்தே வெளியேறும் மெஸ்ஸி ? மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புகிறாரா ? முழு விவரம் !