Sports
"ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன்".. கடுமையான தந்தையாக அன்பை வெளிப்படுத்தும் முன்னாள் கேப்டன் கபில் தேவ்!
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பந்த் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 30ம் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்டுக்கு காரில் செல்லும் போது விபத்தில் சிக்கினார்.
இவரது கார் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு முன், வலது முழங்காலில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட தசைநார் கிழிப்பிற்கு 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.
இதிலிருந்து ஆறு வாரங்களுக்குப்பின், மீண்டும் இதே முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரிஷப் பந்த் நேற்று தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பது ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த பதிபை பார்த்த பலரும் ரிஷப் பந்த் முழுமையாக குணமடைந்து மீண்டும் உங்களை களத்தில் காண ஆவலுடன் இருக்கிறோம் என சகவீரர்களும் அவரது ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரிஷப் பந்த் குணமடைந்த பிறகு அவரது கன்னத்தில் அறைவேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது குறித்துக் கூறியுள்ள கபில் தேவ், "எனக்கு ரிஷப் பந்த் மீது மிகுந்த அன்பு உண்டு. உலகில் உள்ள அனைத்து அன்பையும் பெற, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். நான் போய் அவரை அறைந்துவிட்டு, பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல அவர் குணமடைய வேண்டும்.
உங்கள் விபத்தால், ஒட்டுமொத்த அணியும் நிலைகுலைந்துள்ளது. நான் அவரை நேசிக்கிறேன், ஆனால் நான் அவர் மீது கோபமாக இருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள்? குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை அறையும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. இதைபோல் நான் ரிஷப் பந்தை அறைய விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த "தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்": முக்கிய முடிவுகள்! - முழு விவரம்!
-
தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அதிகமாக பசுந்தேயிலை... 16 தேயிலை விவசாயிகளுக்கு தலா ரூ.25,000!
-
தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : “இதுதான் நமது அடுத்த Target” - முதலமைச்சர் பேசியது என்ன?
-
5 ஆண்டுகளில் தமிழ்நாடு வேளாண்மையில் புரட்சி… திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்!
-
200 மகளிர் தங்கும் வகையில் ரூ.21.02 கோடியில் 4 தோழி விடுதிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!