Sports

"ரிஷப் பண்ட் வேஸ்ட்.. அவர் இடத்தில் இந்த தமிழக வீரரை கொண்டுவாங்க" - BCCI-யிடம் ரசிகர்கள் கோரிக்கை !

தமிழ்நாட்டை சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ம் ஆண்டு தனது 19-வது வயதில் இந்திய அணிக்கு தேர்வானார். அதைத் தொடர்ந்து இந்திய அணியில் அவ்வப்போது இடம்பெற்றுவந்த அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறனை நிரூபித்து வந்துள்ளார்.

அதிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாகூரோடு இணைந்து இக்கட்டான தருணத்தில் அவர் அடித்த அரைசதம் அந்த தொடரையே இந்திய அணியின் பக்கமாக திரும்பியது. அதன் பின்னர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அவர் அடித்த 85 ரன்களும் தொடர்ந்து அகமதாபாத்தில் அவர் அடித்த 96 ரன்களும் அவரை அணியில் அசைக்க முடியாத வீரராக மாற்றியது.

ஆனால், அவருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட காயங்கள் அணியில் அவரின் இடத்தையே கேள்விக்குறியாக்கியது. அணியில் அவர் இடம்பெறுவதும் பின்னர் காயம் காரணமாக வெளியேறுவதுமாகவே அவரின் கடந்த 2 ஆண்டு கிரிக்கெட் பயணம் இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். முதலாவது ஒரு நாள் போட்டியில் இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்த் கவனிக்கத்தக்க வீரராக வாஷிங்டன் சுந்தர் மாறினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 30-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 121-5 என்ற நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இறுதிவரை களத்தில் இருந்த அவர் இந்திய அணி 200 ரன்களை கடக்க உதவி தனது முதல் ஒருநாள் போட்டிகளுக்கான அரைசதத்தை பதிவு செய்தார்.

இந்த போட்டியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியில் இடதுகை வீரர் என்ற காரணத்தால் மோசமாக ஆடிவரும் பண்ட் அணியில் இடம்பெற்றுவரும் நிலையில், அவருக்கு போட்டியாக சிறந்த பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தர் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக ரிஷப் பண்ட் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை இறக்கவேண்டும் என்றும், ஜடேஜாவுக்கு மாற்றாக வரும்காலத்தில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் ஜொலிப்பார் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: FIFA உலகக்கோப்பை.. பெண்கள் மட்டுமே நடுவர்களாக திகழும் முக்கிய போட்டி.. குவியும் பாராட்டு !