Sports

#FIFA2022 :"முதல் போட்டியில் தோற்கவேண்டும்" -எதிரணி வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்ததா கத்தார் ?

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கவுள்ளது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

மேலும், மதுபானத்துக்கு தடை, LGBTQ சமூகத்துக்கு அனுமதி மறுப்பு, மனிதஉரிமை விவகாரம், தீவிர ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றால் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு மிகப்பெரிய குற்றச்சாட்டில் கத்தார் சிக்கியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது பதிவில், "கத்தார் நாடு தங்களுக்கு எதிரான போட்டியில் தோற்கவேண்டும் என்று எட்டு ஈக்வடார் வீரர்களுக்கு $7.4 மில்லியன் லஞ்சம் கொடுத்துள்ளது. ஐந்து கட்டாரி மற்றும் ஈக்வடார் நாட்டினர் இதை உறுதிப்படுத்தினர். இது தவறானது என்று நாங்கள் நம்புகிறோம். இதை பகிர்வது முடிவை பாதிக்கும் என நம்பினாலும் FIFA ஊழலை எதிர்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார். கத்தார் அணி இன்று இரவு தனது முதல் போட்டியில் ஈக்வடார் அணியை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: உ.பி பாணியில் மாட்டை வைத்து அரசியல் செய்த பாஜக மாவட்ட தலைவர் கைது.. அதிரடி காட்டிய தமிழ்நாடு காவல்துறை !