Sports

“T20 உலகக் கோப்பையில் விலகிய பும்ரா.. கோப்பை வெல்லும் வாய்ப்பு உண்டா?”: உண்மையை போட்டுடைத்த வாசிம் ஜாபர்!

கடந்த வியாழக்கிழமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி செய்தி எட்டியது. ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. இது முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் பும்ரா.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முன்னணி பௌலராக அவர் தான் இருக்கிறார். அவர் இல்லாமல் ஆடினால் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு ஏற்கெனவே ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் தான் களமிறங்குகிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

பும்ராவின் வேலைப்பளுவை சரியாக கையாள்வதே கடந்த சில வருடங்களாக இந்திய அணி நிர்வாகத்தின் பிரதானமாக இருந்தது. 2022 ஐ.பி.எல் தொடர் முடிந்து இந்திய அணி இதுவரை 24 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. ஆனால் அவற்றுள் வெறும் 3 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியிருக்கிறார்.

28 வயதான ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியிலும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளிலும் விளையாடினார். முன்பு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலும் பும்ராவின் பெயரும் இடம் பெற்றது. ஆனால் அவருக்கு முதுகு வலி காரணமாக அந்தத் தொடரிலிருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் அவர் உலகக் கோப்பையில் ஆடமாட்டார் என்று செய்திகள் வந்திருந்தாலும், அடுத்த நாள்களில் பும்ரா நிச்சயம் உலகக் கோப்பைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாஃபரிடம், பௌலர்கள் பிரேக் எடுப்பது அவர்களின் செயல்பாட்டை பாதிப்பதோடு காயமடைவதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்துமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தான் ஒரு முறை ஜஹீர் கானுடன் கொண்டிருந்த உரையாடல் பற்றி பகிர்ந்திருக்கிறார் ஜாஃபர்.

"நிச்சயமாக பிரேக் எடுப்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நான் ஜஹீருடன் நெருக்கமாக இருந்ததால் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அவர் வார்செஸ்டர்ஷயர் அணிக்காக 4 மாதங்கள் இடைவிடாமல் கிரிக்கெட் விளையாடினார். அப்படித்தான் 2006 சீசனுக்குப் பிறகு ஜஹீருடைய எழுச்சி தொடங்கியது. இதுதான் அவர் என்னிடம் சொன்னது. அவர் தொடர்ச்சியாக விளையாடினார்.

தொடர்ந்து பந்துவீசிக்கொண்டே இருந்தார். அதனால் அவர் நல்ல ஃபார்மில் இருப்பதாக உணர்ந்தார். அவர் ஒரு பிரேக் எடுத்துவிட்டால், மீண்டும் அதே ஃபார்முக்கு வர சில காலம் எடுத்துக்கொண்டது. ஒருசில பௌலர்கள் அப்படி செயல்படவே விரும்புவார்கள். அவர்கள் களத்தில் இருந்தால், எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். ஒரு பிரேக் விழுந்துவிட்டால், நீங்கள் மீண்டும் முதலில் இருந்து தொடங்கவேண்டும். அதனால்தான் பும்ரா உலகக் கோப்பைக்குத் தயாராவதற்காக தன்னை அதிக வேலைக்கு உட்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார் வாசிம் ஜாஃபர்.

Also Read: கால்பந்து போட்டியில் கலவரம்.. ஆவேசமான ரசிகர்கள்.. பரிதாபமாக பலியான 127 பொதுமக்கள்.. நடந்தது என்ன ?