Sports

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : CSK கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிப்பு !

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டின் 44-வது போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 52 ஆயிரம் சதுர அடியில், நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செஸ் போட்டியில், இந்தியா சார்பில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்குகிறது. மொத்தம் 30 வீரர்,வீராங்கனைகள் 6 அணிகளாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் இடம்பெற்ற தமிழக வாழ்வியலை காட்சிப்படுத்திய நிகழ்ச்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை பல்வேறு வெளிநாட்டவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் 9-ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனியும் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பணக்காரர்களுக்கு 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. அரசின் முன்னுரிமை யாருக்கு? பாஜக எம்.பி விமர்சனம் !