Sports

chess olympiad : வெளிநாட்டவரை தோற்கடித்த 7 வயது சிறுமி ! - அரசு பள்ளி மாணவியால் நெகிழ்ச்சி !

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெறுகின்றனர். இந்த போட்டியில் இந்திய அணி 3 ஓபன் பிரிவுகளிலும், 3 பெண்கள் பிரிவுகளிலும் போட்டியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், செஸ் போட்டியை காண நேரில் வரும் பார்வையாளர்கள் செஸ் விளையாடும் விதமாக, செஸ் விளையாட்டு அரங்கிற்கு வெளியே பெரிய செஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர முடியும்.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலுள்ள 7 வயது அரசு பள்ளி மாணவி சர்வாணிக்கா, இந்த போட்டியை காண வந்துள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த செஸ் போர்டை பயன்படுத்தி அவர் விளையாடியுள்ளார். இதனை அங்கிருந்த பார்வையாளர்களுடன் பார்வையாளராய் வெளிநாட்டு தூதுக்குழு தலைவர் ஒருவர், சிறுமியுடன் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

அப்போது 7 வயது சிறுமி காய்களை மிக நேர்த்தியாக நகர்த்தி வெளிநாட்டவரை வென்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த சக பார்வையாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். மேலும் சிறுமி வெற்றிபெற்றதால் மகிழ்ச்சியடைந்த வெளிநாட்டவர் சிறுமியை தூக்கி வைத்து பாராட்டியதோடு, அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டார்.

வெறும் 7 வயதுடைய அரசுபள்ளி மாணவி செஸ் போட்டியில் வெளிநாட்டவரை தோற்கடித்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "செஸ் விளையாட்டில் போதிய அளவு வீராங்கணைகள் இல்லை .." - இந்திய பெண்கள் A அணியின் கேப்டன் வேதனை !