Sports
"ஐ.பி.எல் அணி உரிமையாளர்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்து" -ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரிக்கை !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐ.பி.எல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐ.பி.எல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐ.பி.எல் பாணியிலான தொடரை ஆரம்பித்துள்ளது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரில் அணிகளை ஏலம் எடுக்க அறிவிப்பு வெளியானது. அதில், ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், போர்ட் எலிசபத் அணியை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது.
இதே போல ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கும் டி20 லீக் தொடரில் மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் முதலீடு செய்துள்ளன.
இந்த நிலையில், பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் லீக் தொடரை தவிர்த்து விட்டு, அமீரகத்தில் நடைபெறும் மற்றொரு டி20 லீக் தொடரில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. டேவிட் வார்னரின் இந்த செயலுக்கு காரணம் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களே காரணம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பிக்பேஷ் லீக்கில் வார்னர் விளையாட வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது. வார்னரை மட்டும் அல்ல, இந்த லிஸ்ட்டில் இன்னும் பல வீரர்கள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் ஐ.பி.எல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம்தான். அது சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் ஆபத்தானதாக உருவெடுத்துள்ளது.
திறமைமிக்க வீரர்கள் மீதான உரிமையின் காரணமாக அவர்கள் எங்கே விளையாட வேண்டும், எங்கே விளையாட கூடாது என்பதை உரிமையாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.வார்னரின் சந்தை மதிப்பிற்கு தேவையான அனைத்தையும் அவர் செய்துள்ளார். ஆனால் இது நடந்தால் ஆஸ்திரேலியா கமர்ஷியல் ரீதியாக தற்கொலை செய்து கொண்டதற்கு சமம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!