Sports

உலகக்கோப்பை வில்வித்தை தொடரில் ஜோதி சுரேகா - அபிஷேக் அசத்தல் : முதல்முறையாக தங்கம் வென்று இந்தியா சாதனை !

ஃப்ரான்சில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வில்வித்தை தொடரில் கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. தொடரில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கம் இதுவாகும். உலகக்கோப்பை வில்வித்தை தொடரானது 4 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இதன் இறுதி சுற்றானது மெக்சிகோவில் அக்டோபர் 15-16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் 3வது சுற்றானது ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.

தங்கப்பதக்கத்திற்கான யுத்தத்தில் ஜோதி சுரேகா வென்னம் மற்றும் அபிஷேக் வர்மா அடங்கிய கலப்பு இந்திய அணி, பலம் வாய்ந்த ஃப்ரான்சின் Sophie Dodemont மற்றும் 48 வயதான ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான Jean-Philippe Boulch உடன் விளையாடியது.

கொடுக்கப்பட்ட 4 வாய்ப்புகளை இலக்கை நோக்கி துல்லியமாக குறிவைத்த இந்திய அணி, முதல் வாய்ப்பில் 40 புள்ளிகளையும், 2வது வாய்ப்பில் 36 புள்ளிகளையும் பெற, 3வது வாய்ப்பில் இரு அணிகளும் 39 என சமபுள்ளியை பெற்றன. 4வது மற்றும் இறுதி வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணி, 37 புள்ளிகள் எடுக்க, முடிவில் 152-149 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளூர் அணியை வீழ்த்தி தொடரில் முதல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

ஏற்கனவே, மகளிர் தனிநபர் பிரிவில் உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். தற்போது, தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

3சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், மொத்தமாக இந்தியா இதுவரை 4 தங்கம், 2வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. 4சுற்றுகள் முடிவில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று பதக்கம் வெல்லும் வீரர்கள் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்வர்.

Also Read: “குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.911.50 கோடி ஒதுக்கீடு” : முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி!