Sports

#IndvsSA : சதமடித்த ராகுல்; சரணடைந்த தென்னாப்ரிக்கா; பாக்சிங் டே டெஸ்டில் இந்தியா அபார வெற்றி!

செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்யது. முதல் இன்னிங்சில் தொடக்க வீரர் ராகுலின் அதிரடியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 327 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் சதம், மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 என அதிகபட்சமாக ரன்களை எடுத்தனர்.

தென்னாப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சில் தடுமாறி தொடக்கத்தில் விக்கெட்டுகளை வாரி இறைக்க, பவுமா மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் படுத்தினார். இருப்பினும், தென்னாப்ரிக்கா 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

130 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் சீரான வேகத்தில் வெளியேறி, 174 ரன்கள் சேர்த்தனர்.

305 ரன்கள் தென்னாப்ரிக்காவுக்கு இமாலய வெற்றியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5ஆம் நாளில் உணவு இடைவேளை வரை 182 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. அதற்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தென்னாப்ரிக்கா இழக்க, இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளும், பும்ரா 5 விக்கெட்டுகளும் எடுத்தனர். போட்டியின் 3வது நாளில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிவேகமாக 100 dismissalsஐ எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக தோனி 36 போட்டிகளில் 100ஐ எட்டிய நிலையில், பண்ட் 26 போட்டிகளிலேயே அதை எட்டியுள்ளார்.

சதமடித்த கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. தென்னாப்ரிக்க மண்ணில் இதுவரை தொடரை வெல்லாத இந்திய அணி, அந்த கரும்புள்ளியை மாற்றும் நோக்கில் இந்த தொடரில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.