Sports

வெண்கலம் வென்ற விவசாயி மகன்... புதிய சாதனை படைக்குமா இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வார் என நாடே எதிர்பார்த்தது.

ஆனால், அரையிறுதிப் போட்டியில் அஜர் பைஜானின் ஹாஜி அலியேவிடம் தோல்வியுற்று ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதையடுத்து வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கஜகஸ்தான் வீரரை 8-0 என்ற கணக்கில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார் பஜ்ரங் புனியா. இந்த வெற்றியால் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வெல்லும் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக ரவி குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி துவங்குவதற்கு முன்பாக பஜ்ரங் புனியாவின் தந்தை எனது 'மகன் வெறும் கையுடன் நாடு திரும்பமாட்டார்' எனத் தெரிவித்திருந்தார். இவரது சொற்படியே பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்துடன் நாடுதிரும்புகிறார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜாஜ்ஜர் மாவட்டத்தின் குடன் கிராமத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் புனியா. வாழையடி வாழையாக அவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. இதுவரை இந்தியா ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் ஆகும். இந்தியா இதுவரை அதிகபட்சமாக 6 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இன்னும் ஒரு பதக்கம் வென்றால் புதிய சாதனையைப் படைக்கும்.

Also Read: “ஒடஞ்சிருந்தாலும் தங்கம் சார்” : அதிதி அசோக் பெருமிதமிக்க தோல்வி!