Sports

“எனக்கு CSK-வை பிடிக்காது; ஏன் தெரியுமா?” - ஸ்ரீசாந்த் சொல்லும் காரணம் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டார். இருப்பினும் ஸ்ரீசாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்தது.

இந்நிலையில், பி.சி.சி.ஐ-யின் விசாரணை அதிகாரி ஸ்ரீசாந்த்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டார். தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாக ஸ்ரீசாந்த் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தான் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடவில்லை என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எனது குடும்பத்தினர் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடவில்லை. 100 கோடி ரூபாய் தந்தால் கூட மேட்ச் ஃபிக்ஸிங் எனும் தவறை செய்யமாட்டேன். மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள் சிலர், சிரித்த முகத்துடன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை'' எனத் தெரிவித்தார்.

பேடி உப்டான்

பின்னர் பேடி உப்டான் தனது சுயசரிதையில் சி.எஸ்.கே-வுக்கு எதிரான போட்டியில் ஸ்ரீசாந்த்தை அணியில் சேர்க்காததற்கு அவர், தன்னிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டார் என கூறியிருந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''உப்டான் குறிப்பிட்டதைப் போல நான் எப்போது அவரிடம் நடந்துகொண்டேன் என்று அவர் நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொல்லுங்கள். இதுகுறித்து ராகுல் டிராவிட்டிடம்தான் கேட்க வேண்டும்.

சி.எஸ்.கே-வுக்கு எதிரான போட்டியில் என்னை அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என உப்டானிடம் கெஞ்சினேன். அதற்கு முக்கிய காரணம் எனக்கு சி.எஸ்.கேவை பிடிக்காது என்பதுதான். எனக்கு சிஎஸ்கேவை பிடிக்காததற்கு தோனியோ அல்லது என். ஸ்ரீனிவாசனோ காரணமல்ல.

எனக்கு சி.எஸ்.கேவை பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர்களது மஞ்சள் நிற ஜெர்சிதான். இதே காரணத்துக்காகத்தான் நான் ஆஸ்திரேலிய அணியையும் வெறுத்துள்ளேன். நான் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளேன், அதனால்தான் சென்னை அணிக்கு எதிராக விளையாடவேண்டும் என்று உப்டானிடம் கேட்டேன்.

ஆனால், அவர் என்மீது கூறிய குற்றச்சாட்டு என்னை மனதளவில் காயமடையச் செய்துள்ளது. அவரது புத்தகம் அதிகம் விற்கவேண்டும் என்பதற்காக இதுபோன்று எழுதியுள்ளார்" எனக் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிடிக்காததற்கு ஸ்ரீசாந்த் தந்த விளக்கத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.