Sports

தோனி மூலம் மிகப் பெரிய பாடத்தை நான் கற்று கொண்டேன் - விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று காலை தோனியை புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், தோனியுடன் விளையாடிய அந்த போட்டியை தன்னால் மறக்க முடியாது எனவும், அது ஒரு ஸ்பெஷல் நைட் என தெரிவித்திருந்தார். அதோடு, தோனி தன்னை ஃபிட்னெஸ் டெஸ்ட் போன்று ஓட வைத்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ட்விட்டரில் கோலி பதிவிட்ட அந்த புகைப்படம் தோனி ஓய்வு பெற போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்தது. பின்னர், தோனியின் மனைவி சாக்ஷி ஓய்வு குறித்து வெளியானது வெறும் வதந்தி என தெரிவித்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''எதையும் மனதில் வைத்து அந்த படத்தை பகிரவில்லை. யதார்த்தமாக தான் பகிர்ந்தேன். அப்போட்டி சிறப்பு வாய்ந்த போட்டி, அதனால் தான் பகிர்ந்தேன். ஆனால், மக்கள் அதனை வேறுமாதிரி புரிந்து கொண்டனர். இதன் மூலம் சமூக வலைதள உலகில் மிகப் பெரிய பாடத்தை நான் கற்று கொண்டேன்.

தோனி எப்போதும் இந்தியக் கிரிக்கெட்டின் நலனைப் பற்றிதான் தோனி சிந்திப்பார். கிரிக்கெட் அணி நிர்வாகம் என்ன சிந்திக்கிறதோ அதைத்தான் தோனியும் சிந்திப்பார். தோனி, தன்னைப் பற்றி தவறாகக் கணித்தவர்களின் எண்ணத்தை மாற்றியமைத்தவர்.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அனுபவம் என்பது மிகவும் முக்கியமானது. வயது என்பது ஒரு விஷயமல்ல என்று பலர் நிரூபித்து காட்டியுள்ளனர்.அதேபோல தோனியும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் பலமுறை இதனை செய்துகாட்டியுள்ளார். தோனி இன்றும் மிகவும் மதிப்புமிக்க வீரராகவே இருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.

பின்னர் தோனியின் ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, " ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. இது தொடர்பாக மற்றவர்கள் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.