Sports

டெஸ்ட் போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா : தேர்வுக்குழு சூசகத் தகவல்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோல பேட்டிங்கில், ரஹானே மற்றும் விஹாரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

அதேநேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. அத்தொடரில், அவர் முறையே 44, 38,13 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும், அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடித்த பின்னர் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுலிற்கு பதில் ரோஹித் சர்மாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என கங்குலி, லட்சுமணன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ''கே.எல்.ராகுல் ஒரு சிறப்பான வீரர். தற்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். அவருக்கு கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஒருவேளை அவரது ஆட்டம் சிறப்பாக இல்லையென்றால், ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்குவது குறித்து ஆலோசிப்போம். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு பின் தேர்வுக்குழு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்கான அணித்தேர்வில் இதுகுறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலே ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.