Sports

தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டியில் சிந்து : தங்கம் வெல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து, சீன வீராங்கனை சென் யு ஃபெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார். தொடக்கத்தில் இருந்தே போட்டியை தன்வசப்படுத்திய சிந்து 40 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். 21க்கு17, 21க்கு14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், சிந்து தொடர்ந்து 3வது முறையாக உலக பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். 2017, 2018 என தொடர்ந்து 2 ஆண்டுகள் உலக பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிந்துவால், என்னவோ வெள்ளிப்பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.

எட்டாக்கனியாக இருக்கும் தங்கப்பதக்கத்தை வெல்ல, தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் சிந்து, இந்த முறை தங்கப்பதக்கத்தை உச்சி முகர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

நாளைய இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கத்தை சூடும் பட்சத்தில், உலக பேட்மிண்டன் தொடரில் தங்கபதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து படைப்பார். அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ விருது என பல விருதுகளை அலங்கரித்த இந்த மங்கை, உலக சாம்பியன் மகுடத்தையும் அலங்கரிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.