Sports

2023 உலகக்கோப்பையை இந்தியா அணி வெல்லும் : எப்படின்னு கேட்கறீங்களா.. இந்தக் கணக்கைப் பாருங்க..!

2019ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம், நேற்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது நியூசிலாந்து. 242 ரன்கள் இலக்கை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரின் முடிவில் 241 ரன்களே எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

பின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் டை ஆனதால், அதிக பவுண்டரிகளை விளாசிய இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.

உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதால் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது, உலகக் கோப்பை தொடரில் 3வது முறையாக தொடர்ந்து, போட்டியை நடத்திய நாடே உலகக்கோப்பையை வென்றுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு உலககோப்பையை இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் நடத்தின. 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.

2015ம் ஆண்டு உலககோப்பையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் நடத்தின. 2015 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. தற்போது 2019ம் ஆண்டில் போட்டியை நடத்திய இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது.

2023ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்வது உறுதி என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இது ஒருபக்கம் ஜோதிடக் கணிப்பு போல இருந்தாலும், இன்னொரு பக்கம் இதை ரசிகர்கள் உண்மை என நம்பத் தொடங்கி உள்ளனர். இதனால், அடுத்த உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான் கிடைக்கும் என்கீற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.