Sports

டக் அவுட்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா? - மகளிர் கிரிக்கெட்டில் ருசிகரம்!

கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியைச் சேர்ந்த அனைத்து பேட்ஸ்வுமன்களும் டக்-அவுட் ஆன சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் வடக்கு மண்டல 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 30 ஓவர் கிரிக்கெட் போட்டி பெரிந்தல்மனாவில் நடைபெற்றது. காசர்கோடு மற்றும் வயநாடு மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய காசர்கோடு அணி, ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் இறுதி ஆட்டக்காரர்கள் வரை அனைவருமே 0 ரன்னில் டக்-அவுட்டாகி வெளியேறினர். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அனைவருமே போல்ட் ஆகி ஆட்டமிழந்துள்ளனர்.

அனைத்து ஆட்டக்காரர்களும் 0 ரன்னில் அவுட் ஆன நிலையில் உதிரிகளாக அந்த அணிக்கு நான்கு ரன்கள் கிடைத்தன. இதனையடுத்து 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய வயநாடு அணி 5 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

காசர்கோடு அணியினர் பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வருவதாகவும், எதிர்காலத்தில் சிறப்பான அணியாக வருவோம் எனவும் அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.