Politics

‘சமூகநீதி நாள்’ - அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்புகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!

தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் சமூகநீதி நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (செப்.15) சென்னை - அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, கழக உடன்பிறப்புகளுடன் சமூகநீதி நாள் உறுதி ஏற்றார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய, கழக உடன்பிறப்புகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி பின்வருமாறு,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்.

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்.”

Also Read: செப்.19 அன்று தி.மு.க முப்பெரும் விழா நடைபெறும்! : தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு!