Politics

“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாட்டில் மேடைக்கு மேடை தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொள்கைத் தலைவர்கள் என சொல்லி பிரச்சாரம் செய்யும் த.வெ.க.வினரின் ஆட்சியில், இரு தலைவர்களின் பிறந்தநாள்களை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு பேரணிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது த.வெ.க அரசு.

இந்து முன்னணி நடத்தும் ஊர்வலங்களுக்கு உடனடி அனுமதி அளித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட அரும்பாடுபட்ட தலைவர்களுக்கான பேரணிகளுக்கு தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,

“தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும்;

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?

பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?

காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.”

Also Read: “விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!