Politics

“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, ஏட்டிக்குப் போட்டியாக பல வெற்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அவற்றில் முக்கியமான எதுவும் இல்லாத ஒரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது த.வெ.க அரசு.

இதனை தரவுகளுடன் விமர்சிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது பின்வருமாறு,

“த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியிருக்கிறது. பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிற இந்த பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை.

“தமிழ்நாட்டில் கடன் வாங்குவதை குறைக்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதியுடன்தான் கடன் வாங்குகிறோம். கடன் வாங்குவது அதிகரிக்கத்தான் செய்யும்” என இன்று நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரே ஒப்புகொண்டுள்ளார்.

த.வெ.க அரசின் நடப்பாண்டிற்கான கடன் தொகையை வைத்துப்பார்த்தால், அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக, தமிழ்நாட்டின் கடன் அதிகரிக்கலாம்.

தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை (revenue deficit) ரூ.48,699 கோடியாக இருந்தது. அது இன்றைக்கு த.வெ.க ஆட்சியில் ரூ.55,775 கோடியாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், த.வெ.க ஆட்சியில் ரூ.2.26 லட்சம் கோடி வரி வருவாய் என்கிறார்கள். அதாவது, ரூ.3 ஆயிரம் கோடி குறைவாக கணக்கு காட்டுகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டு, இன்றைக்கு வேறு பெயர்களில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, திட்டங்களுக்கான உரிய நிதிக்கூட விடுவிக்கப்படவில்லை. குறிப்பாக, தமிழ் வளர்ச்சித் துறைக்கு எவ்வளவு நிதி என்றுகூட இன்றைக்கு த.வெ.க அரசு அறிவிக்கவில்லை.

தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த ரூ.1 கோடி வைத்து என்ன செய்வீர்கள்? தொல்லியல் ஆராய்ச்சியின் நிலை, அருங்காட்சியங்களின் நிலை எல்லாம் என்னாகும்? இதற்கு தெளிவான விளக்கம் அளிக்காமல், சுற்றுலா கொண்டு செல்வோம் என்கிறார்கள்.

த.வெ.க ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது குறித்து பேச்சு, மூச்சே இல்லாமல் இன்றைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை படிக்கும்போது, ஆற்றங்கரை நாகரிகங்களின் பெருமை பற்றி சொல்கிறபோது பல இடங்களை குறிப்பிடுகிறார்.

ஆனால், தழைத்து ஓங்கிய தமிழ் மண்ணின் வைகை ஆற்றங்கரை நாகரிகமான ‘கீழடி’ பற்றியும், ‘பொருநை’ நாகரிகம் பற்றியும் எந்த சொல்லும் இல்லை. தமிழ்நாட்டின் நாகரிகத்தை, பண்பாட்டை முன்னிறுத்த வேண்டும் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாத வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துவிட்டது.”

Also Read: “மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!