Politics

“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், “தாங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்” என்ற மனநிலையோடு த.வெ.க.வினர் இயங்கி வருகின்றனர்.

குறிப்பாக, ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்விக்கு, ‘சாக்குப்போக்குகள்’ வருகிறதே தவிர தீர்வுகள் வந்ததாக இல்லை.

அதிலும், நிர்வாகத் தோல்வி வெளியில் அம்பலப்பட்டுவிடக்கூடாது என விமர்சகர்கள் மீதான கைது நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் ஓங்கிக் கோண்டே செல்கிறது.

அதற்கு கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் கைது நடவடிக்கைகளும், தொடர்பில்லாத குற்ற வழக்குப்பதிவுகளும் எடுத்துக்காட்டுகளாய் அமைந்துள்ளன.

எதிர்க்கட்சியின் தலையாயப் பணியே, அரசின் நிர்வாகத் தோல்வியையும், தவறுகளையும் சுட்டிக்காட்டுவதுதான். இதுவே, ஜனநாயகத்தின் அடிப்படை மாண்பு என்பதைக் கூட அறியாத ஒரு கூட்டம் ஆட்சியைப் பிடித்ததும் இதற்கு காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி த.வெ.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள தி இந்து ஆங்கில் நாளிதழின் தலையங்கத்தை மேற்கோள்காட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது தி இந்து நாளேட்டின் இன்றைய தலையங்கம்.

நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.

ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!”

Also Read: “இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!