Politics

“ஓடி ஒளியும் அவசியம் தி.மு.க.வினருக்கு என்றுமே கிடையாது!” : சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு!

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைப் பெற்று, சென்னை திரும்பிய சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு அவர்கள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“நான் ஓடவில்லை. ஒளியவில்லை. பதுங்கவில்லை. தி.மு.க எங்களை அப்படி வளர்க்கவில்லை. உடல்நிலை பரவாயில்லை. 2016-ல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் முதல் முதலாக அங்கு சிகிச்சை பெற்றேன். இதையடுத்து 2023-ல் அதே மருத்துவமனைக்கு மீண்டும் சென்று சிகிச்சை பெற்றேன்.

தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முறையாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான், மீண்டும் சிங்கப்பூரில் கடந்த 15-ஆம் தேதி செல்ல வேண்டுமென விசாவுக்கு அப்ளை செய்தேன். 17-ஆம் தேதி விசா கிடைத்தது.

அந்த நேரத்தில் காவல்துறை நண்பர்கள் சோதனை என்ற பெயரில் ‘வாரண்ட்’ அளித்ததால், பயணத்தை 26-ஆம் தேதிக்கு மாற்றினேன்.

மருத்துவ சிகிச்சைப் பெற்ற அனைத்து ஆதாரங்களும் என்னிடத்தில் உள்ளது. மொத்த பரிசோதனைக்கான விவரங்கள் என்னிடம் உள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைடுத்து கடிதம் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. நான் சென்னை திரும்ப 10 நாட்களாகும் என கடிதம் வாயிலாக தெரிவித்துவிட்டேன்.

ஆனால், 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் தேதிக்கு பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் நான் விசாரணைக்கு வர இருப்பதாக தெரிவித்துவிட்டேன்.

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று வழக்கறிஞர் வாயிலாக கடிதம் கொடுக்கப்பட்டது. நான் ஓடவில்லை ஒளியவில்லை. சுற்றுலா பயணியாக வெளிநாடு செல்லவில்லை. இதுதான் இந்த நாட்டுக்கு சொல்ல வேண்டிய விஷயம்.

இந்த ஒரு விவகாரம் தொடர்பாக கற்பனையாக பல விஷயங்கள் பரப்பப்பட்டது. பொதுவாக என்னை பொறுத்த அளவு ,என்னை டார்ச்சர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நான் தி.மு.க கொறடாவாக, தலைவர் என்னை நியமனம் செய்துள்ளார். அதை பேரவைத் தலைவர் அங்கீகரித்துள்ளார்.

எனவே, மூன்று நாள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அதிகமான கேள்வி நான் கேட்டிருப்பேன். எனது கடமையை சட்டமன்றத்தில் செய்து ஆக வேண்டும். நான் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு தான் ஆக வேண்டும். அது பிடிக்குதா பிடிக்கவில்லையா என்பது போக போக தெரியும்.

வருகிற 15-ம் தேதி விசாரணைக்காக நிச்சயமாக ஆஜராக இருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பெரிய அளவில் பேச முடியாது. நீதி என் பக்கத்தில் உள்ளது. நீதிக்கு தலை வணங்குகிறேன். நீதிமன்றம் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது. நான் குற்றம் செய்யவில்லை, குற்றம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை” என தெரிவித்தார்.

Also Read: வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!