Politics

குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று (ஜூலை 08) நடைபெற்றது. இம் முகாமில் ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் பங்கேற்று பொதுமக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

கூட்டத்தில் ஒருவர் அமைச்சர் ரமேஷ் இடம் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியான ரூ.2500 ரூபாய் பணம் எப்போது கிடைக்கும்? என கேள்வி கேட்ட நிலையில், அமைச்சருடன் இருந்தவர்கள் கேள்வி கேட்டவரின் போனை பிடுங்கி, கூட்டத்தை விட்டு அவரை வெளியே துரத்தி விட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் அளிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 என்பதை திராவிட மாடல் 2.O ஆட்சியில் ரூ.2000-ஆக உயர்த்தி வழங்குவோம் என கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தார்.

ஆனால், இலவசம் என கொச்சைப்படுத்தியதும் மட்டுமில்லாமல் ஏழை பெண்களின் பொருளாதார சுமையைப் பெரிதும் குறைத்த மகளிர் உரிமைத் தொகையைப் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் மறைமுகமாக வசைபாடியதும் மட்டுமன்றி, மீண்டும் திமுக தேர்தல் வாக்குறுதியையே காப்பியடித்து ரூ.2500 வழங்கப்படும் என உறுதியளித்தது தவெக.

இப்போது, பொதுமக்களுக்கு பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, அவற்றை எப்போது நிறைவேற்றுவீர்கள் என பொதுமக்கள் கேட்டால் அவர்களையே துரத்தி விடுவதே இந்த ரீல்ஸ் மாடல் அரசின் வேலையாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

வாக்களித்தவர்களோ வாக்கு அளிக்காதவர்களோ மக்கள் குறைதீர் முகாமில் கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் உரிமையில்லை என தவெக அரசு மறுக்கப் பார்க்கிறதா? மக்களின் கேள்வி உரிமையை நசுக்கப் பார்க்கிறதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: “அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!