Politics

“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!

பொதுவாகவே அதிமுகவும், பாஜகவும் திராவிட மாடலை பற்றி அவதூறு பரப்பி வருவது வழக்கமாகி விட்டது. அதோடு தமிழ்நாடு அரசு கொண்டு வரும் மக்கள் சார்ந்த திட்டங்களை பாராட்டாமல், அதில் ஏதாவது ஒரு உப்பு சப்பில்லாத விமர்சனங்களையும் வைத்து வருகிறது.

அதோடு 2021-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் செய்ய முடியாது என்ற எதிர்க்கட்சியினரின் முகத்தில் கரியை பூசும் விதமாக, சொன்னதை மட்டுமில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில் எந்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தாரோ, தற்போது அதே திட்டங்களை மாடலாக வைத்து அதிமுக தேர்தல் அறிக்கையாக முதற்கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-

ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக்கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை.

இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது !

2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் திரு.பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் நம் திராவிட நாயகன் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.

இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக. அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்.

Also Read: “அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!